Published : 22 Jun 2022 06:22 AM
Last Updated : 22 Jun 2022 06:22 AM

தூத்துக்குடியில் நீதிமன்றம் அருகே சொத்து தகராறில் இளைஞர் கொலை: தந்தை உட்பட 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பட்டப்பகலில் நீதிமன்றம் அருகே சொத்து தகராறில் தன்னை வெட்டிக் கொல்ல முயன்ற மகனை கொலை செய்த தந்தை உட்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சுந்தரலிங்கநகரைச் சேர்ந்தவர் க.தமிழழகன் (57). இவரது மகன் காசிராஜன் (36). ஓட்டுநராக வேலை செய்து வந்தார். குடும்ப பிரச்சினை மற்றும் சொத்து விவகாரம் தொடர்பாக தந்தை , மகனுக்கு இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் தமிழழகன் மீதான ஒரு வழக்கு விசாரணை தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதன் பொருட்டு தமிழழகன் தனது உறவினர்களான ஓட்டப்பிடாரம் சுந்தரலிங்கநகரை சேர்ந்த கடல்ராஜா (45), தூத்துக்குடி எட்டயபுரம் சாலை வீட்டுவசதி வாரியகுடியிருப்பைச் சேர்ந்த காசிதுரை(31) ஆகியோருடன் காரில் நேற்று தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு வந்தார்.

காரை நீதிமன்றத்துக்கு எதிரேயுள்ள மணிநகர் 1-வது தெருவில் நிறுத்தி விட்டு தமிழழகன் நீதிமன்றத்தில் ஆஜரானார். திரும்பி வந்து தனது காரில் அவர் ஏற முயன்ற போது, அங்கு வந்த காசிராஜன், மறைத்து வைத்திருந்த அரிவாளால் தந்தையையும், அவருடன் இருந்த கடல்ராஜா, காசிதுரை ஆகியோரையும் வெட்டியுள்ளார். 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

சுதாரித்துக் கொண்ட 3 பேரும் காசிராஜன் கையில் இருந்த அரிவாளை பறித்து அவரை வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த காசிராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்தும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், ஏஎஸ்பி சந்தீஸ்,மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தமிழழகன், கடல்ராஜா, காசிதுரை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். காயத்துக்கு சிகிச்சை பெற மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் பட்டப்பகலில் மக்கள் நெருக்கம் அதிகம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x