Published : 20 Jun 2022 05:28 AM
Last Updated : 20 Jun 2022 05:28 AM

கந்துவட்டி வசூலிக்கும் கும்பலிடம் சிக்கி தவிக்கும் பெண்கள்: மாநிலத்திலேயே நீலகிரியில் அதிகபட்ச வழக்குகள் பதிவு

உதகை: நுண்கடன் என்ற பெயரில் நீலகிரி மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் மகளிர் சிக்கித் தவித்து வருகின்றனர்.

கடந்த 8-ம் தேதி முதல் ‘ஆபரேஷன் கந்து வட்டி’ திட்டத்தை அறிவித்து, கந்துவட்டி கும்பல் மீது தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கந்துவட்டி தொடர்பாக 140 புகார் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 82 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள புகார் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாநிலத்திலேயே அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், பல்வேறு கந்துவட்டி சார்ந்தவர்கள் மீது போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள், வேறு மாநிலத்தில் தஞ்சமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த கும்பல்,கந்துவட்டி மட்டுமின்றி நுண்கடன் நிறுவனங்கள் என்ற பெயரில் பெண்களை வதைத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர்சு.மனோகரன் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில்‌ நுண்கடன்‌ என்ற பெயரில்‌ கந்துவட்டி வசூலிப்பதைத்‌ தடை செய்ய வேண்டும். தமிழக அரசு 'ஆபரேஷன்‌ கந்துவட்டி'என்ற புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது பாராட்டத்தக்கது. கிராமம்‌, நகரம்‌ என்றில்லாமல்‌, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும்‌ புற்றீசல்‌ போல நுண்கடன்‌ நிறுவனங்கள்‌ முளைத்துள்ளன. மகளிருக்கு கடன்‌ வழங்கும்‌போது, அதிகமாக சேவை கட்டணம்‌ மற்றும்‌ வட்டி வசூலிக்கின்றனர்‌.

இவற்றில்‌ பணிபுரியும்‌ ஊழியர்கள்‌, மேலாளர்‌ போன்றோர்‌ மகளிரிடம்‌ வசூலிக்கும்‌ மாதத்‌ தவணையில்‌ முறைகேடுகள்‌ செய்வது,‌ செலுத்திய தவணையை மீண்டும் செலுத்த செய்வது, மறுப்போருக்கு புதிய கடன்‌ தர மறுப்பது, சிபில்‌ அறிக்கையில்‌ பெயர்‌ சேர்ந்துவிடும்‌ எனக் கூறுவது என பல்வேறு வகையில் மிரட்டுகின்றனர்.

உறுப்பினருக்கு தெரியாமலேயே புதிய கடன்‌ விண்ணப்பம்‌ செய்வது உள்ளிட்டமுறைகேடுகளிலும் ஈடுபடுகின்றனர்‌. உயிரிழந்த நபர்களுக்கு காப்பீடு பெற்றுத்‌ தராமல்‌, வாரிசுதாரருக்கு வக்கீல்‌ நோட்டீஸ் அனுப்பி கடன்‌ வசூலில்‌ ஈடுபடுவதும்‌ மோசமான செயல்.

மேலும்‌, வசூலிக்கப்படும்‌ மாதத்‌ தவணைக்கு சில நிறுவனங்களைத்‌ தவிர, பெரும்பாலான நிறுவனங்கள்‌ ரசீது வழங்குவதில்லை. இதுபோன்ற செயல்களை அறியாமலேயே பெண்கள்‌ கடன்‌ வலையில்‌ சிக்கி, குடும்பத்தில்‌ அமைதியின்மை ஏற்படுகிறது.

இதுமட்டுமின்றி கரூர்‌, தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தகந்துவட்டிக்காரர்கள்‌ ஏராளமானோர்‌, நீலகிரி மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர்‌. இவர்கள்‌ கூட்டுவட்டி வசூலிக்கின்றனர்‌. பெண்களுக்கு பெரும்‌ அச்சுறுத்தலாக உள்ளனர்‌.மேலும்‌, நுண்கடன்‌ நிறுவனங்களைபோலவே, மாவட்டம் முழுவதும்புற்றீசல்கள்‌போல அறக்கட்டளைகள்‌ முளைத்துள்ளன.

இவர்கள்‌ மகளிருக்கும்‌, வங்கிகளுக்கும்‌ உறவு ஏற்படுத்துவதுபோன்று, மகளிரிடம்‌ சேவை கட்டணம்‌ வசூலிப்பதும்,‌ கடன்‌ வாங்கி தருவதாக ஏமாற்றி பணம்‌ வசூலிப்பதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. வங்கிகள்‌ இவற்றை ஊக்குவிப்பது தவறான செயல்.

நுண்கடன்‌ நிறுவனங்கள்‌, கந்துவட்டி கும்பல்‌ மற்றும்‌ அறக்கட்டளைகள்‌ குறித்து புகார்‌ அளிக்க பெண்கள்‌ தயங்குகின்றனர்‌. மாவட்டத்திலுள்ள நுண்கடன்‌ நிறுவனங்களை ஆய்வு செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்" என்றார்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் கூறும்போது ‘நீலகிரி மாவட்டத்தில் கந்துவட்டி தொடர்பான புகார்கள் இருந்தால், மக்கள் தைரியமாக காவல்துறையிடம் அளிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x