

சென்னை: சென்னையில் குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக கடந்த ஒரு வாரத்தில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக “புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை” என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 12-ம் தேதி முதல் ஒரு வார காலத்தில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தொடர்புடைய 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் ஆணையர் எச்சரிக்கை
சென்னை பெருநகர காவல் துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உட்பட சட்ட விரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.