

சென்னையில் உள்ள ஆருத்ராகோல்டு டிரேடிங் நிறுவனம், முதலீடு செய்பவர்களுக்கு மாதம்தோறும் 10 - 30 % வரை வட்டிதருவதாகக் கூறி ரூ.1,678 கோடி வரை வசூலித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன இயக்குநர்கள்14 பேர் மீதும், 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி இந்நிறுவன இயக்குநர்களில் ஒருவரான காஞ்சிபுரம் ஹரீஷ், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நடந்தது. அப்போது பெருநகர அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கும் வாய்ப்புள்ளது என ஆட்சேபம் தெரிவித்ததால், அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.