Published : 17 Jun 2022 06:02 AM
Last Updated : 17 Jun 2022 06:02 AM

முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்த நபரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வேலப்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி விமர்சித்ததாக ஆரணி தாலுகா போலீஸில் ரவி என்பவர் புகார் அளித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, முன்ஜாமீன் கோரி செந்தில்குமார் தொடர்ந்த வழக்கை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று நடந்தது. அப்போது, செந்தில்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தனது பதிவுக்கு மன்னிப்பு கோரி செந்தில்குமார் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்க மறுத்த நீதிபதி, மனுதாரரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x