Published : 15 Jun 2022 06:38 AM
Last Updated : 15 Jun 2022 06:38 AM

கோவையில் தனியார் மருத்துவமனை தாக்கப்பட்ட சம்பவத்தில் கைதான மருத்துவர் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க மனு

கோவை: கோவை மருத்துவமனையில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், கைதான மருத்துவர் உள்ளிட்ட ஐவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கோவை சத்தி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் ராமச்சந்திரன்(75), கடந்த 2017-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த மருத்துவர் உமாசங் கருக்கு மருத்துவமனையை குத்த கைக்கு விட்டிருந்தார்.

வாடகை பாக்கி தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2020-ம்ஆண்டு டிசம்பர் மாதம் 20 பேர் கொண்ட கும்பல் மருத்துவ மனைக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். புகாரின்பேரில் ரத்தினபுரி போலீஸார் விசாரித்தனர்.

இச்சம்பவத்தில் அரசியல் தலையீடுகள் உள்ளதாக புகார் கூறப்பட்டதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது.

போலீஸார் விசாரணை நடத்தி, மருத்துவமனையின் உரிமையாளர் ராமச்சந்திரன், மருத்துவர் காமராஜ், ராமச்சந்திரனின் உதவியாளர் முருகேஷ்(47), கார் ஓட்டுநர் பழனிசாமி, கூலிப்படையைச் சேர்ந்த ரத்தினபுரி மூர்த்தி(45) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். ஐவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் தகவல்களை பெற, 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் நேற்று மனுதாக்கல் செய்தனர். அதேபோல, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில் வாடகைத் தொகை விவகாரம் தொடர்பாக ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், மருத்துவர் உமாசங்கர், நிர்வாகி மருதவாணன் ஆகியோர் கடந்தாண்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கும் கோவை மாவட்ட சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்தாண்டு ஜனவரி மாதம் நடந்த சாலை விபத்தில் மருத்துவர் உமாசங்கர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x