Published : 14 Jun 2022 03:58 PM
Last Updated : 14 Jun 2022 03:58 PM

ஆந்திராவிலிருந்து குட்கா கடத்தல் | ஒருவர் கைது, 452 கிலோ புகையிலை பறிமுதல்

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு, சரக்கு வாகனத்தில் பூண்டு மூட்டைகளின் நடுவே மறைத்து குட்கா பாக்கெட்டுகளை கடத்தி வந்தவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 452.7 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மற்றும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, புனித தோமையர்மலை (S-1) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நேற்று (ஜூன் 13) காலை, ஆலந்தூர், பால்வெல்ஸ் சாலையில் வாகனத் தணிக்கையில் இருந்தபோது, அவ்வழியே வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட இலகுரக சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தபோது, வாகனத்தை ஓட்டி வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில் வாகனத்தை சோதனை செய்தபோது, பூண்டு மூட்டைகளின் நடுவே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் அடங்கிய மூட்டைகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சட்டவிரோதமாக குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்த ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார்,என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து வாகனத்தில் கடத்தி வந்த 452.7 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், வி1, எம்டிஎம், ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் Suzuki Super Carry இலகுரக சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகுமாரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், சென்னையில் உள்ள கடைகளுக்கு சட்டவிரோதமாக விநியோகம் செய்வதற்காக அவர் ஆந்திராவில் இருந்து குட்கா புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது.இதையடுத்து,
சிவகுமார் நேற்று (ஜூன் 13) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x