Published : 12 Jun 2022 07:40 AM
Last Updated : 12 Jun 2022 07:40 AM

மாணவிக்கு ஆபாச வீடியோ: கல்லூரி தலைவர் கைது

தாஸ்வின் ஜான் கிரேஸ்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக செவிலியர் பயிற்சி கல்லூரி தலைவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி மற்றும் கேட்டரிங் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ்(38). இவர் பாஜக சிறுபான்மை பிரிவு கிழக்கு மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ தற்போது அங்கு பயின்று வரும் மாணவிகளிடம் திடீரென பரவியதால் கல்லூரி மாணவிகள், பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், நேற்று காலை கல்லூரி மூடப்பட்டிருந்ததால் கல்லூரிக்கு வந்த மாணவிகள் பழைய பேருந்து நிலையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மாணவிகளின் போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். கல்லூரி மாணவிகள் தங்களின் படிப்புக்கும் எதிர்காலத்துக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும், கல்லூரி கட்டணத்தையும், சான்றிதழ்களையும் திருப்பித் தர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அவர்களிடம் டிஎஸ்பி சகாயஜோஸ், வட்டாட்சியர் அறிவழகன், அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

2 பிரிவுகளில் வழக்கு

தொடர்ந்து, கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புதல் என 2 பிரிவுகளின் கீழ் அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x