Published : 09 Jun 2022 06:55 AM
Last Updated : 09 Jun 2022 06:55 AM

சேலம் | காதலை ஏற்க மறுத்ததால் கல்லூரி மாணவி கொலை: 4 தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை

சேலம்: ஆத்தூர் அருகே காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியின் மீது கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த மாணவரை 4 தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆத்தூர் அடுத்த கெங்கவல்லி கூடமலையைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன் (45). இவரது மனைவி ஜெயா (40). இவர்களது மகள் ரோஜா. இவர் ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ இரண்டாமாண்டு படித்து வந்தார். ஆத்தூர் அடுத்த தாண்டவராயபுரத்தைச் சேர்ந்தவர் நீலகிருஷ்ணன். இவரது மகன் சாமிதுரை (22). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டயப்படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது உறவினர் வீட்டில் ரோஜாவை சாமிதுரை சந்தித்துள்ளார். இதையடுத்து, ரோஜாவை, சாமிதுரை ஒருதலையாக காதலித்துள்ளார். மேலும், ரோஜாவிடம், சாமிதுரை காதலை சொன்னபோது, ரோஜா ஏற்கவில்லை. இதுதொடர்பாக ரோஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாமிதுரையின் வீட்டுக்கு சென்று எச்சரித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ரோஜாவின் வீட்டுக்கு சென்ற சாமிதுரை, ரோஜாவின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பினார். இதுதொடர்பாக கெங்கவல்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சாமிதுரையை தேடி வருகின்றனர்.

இதனிடையே, கொலையாளியை கைது செய்யும் வரை, உடலை வாங்க மாட்டோம் என நேற்று சேலம் அரசு மருத்துமனையில் ரோஜாவின் பெற்றோரும், உறவினர்களும் தெரிவித்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர், உடலை அவர்கள் வாங்கிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x