Published : 07 Jun 2022 06:40 AM
Last Updated : 07 Jun 2022 06:40 AM

தூத்துக்குடி | கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 88 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 88 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முழுமையாக தடுப்பது குறித்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுடன் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் அவரது அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மாவட்டத்தில் சட்ட விரோதமான போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தீவிரமாக கண்காணித்து, முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதில் நடவடிக்கை எடுக்கத் தவறும் காவல் நிலைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.7,74,500 மதிப்புள்ள 77.5 கிலோ கஞ்சா மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,43,600 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 55 கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உள்ளிட்ட மொத்தம் 88 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 54 பேரின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 27 பேர் உட்பட மொத்தம் 110 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனை, ரவுடியிசம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையில அடைக்கப்படுவார்கள் என்றார்.

கூட்டத்தில் ஏடிஎஸ்பி கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக ஏஎஸ்பி சந்தீஸ், டிஎஸ்பிக்கள் பிரகாஷ், வெங்கடேசன், ஆவுடையப்பன் மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x