Published : 07 Jun 2022 06:20 AM
Last Updated : 07 Jun 2022 06:20 AM

தி.மலையில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் மரணம்? - அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர். படம்:இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் செங்கம் வட்டம் பெரியகல் தாம்பாடி கிராமத்தில் வசிப்பவர் விவேகானந்தன். இவரது மனைவி புஷ்பா(26).

இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர் ஒப்புதலுடன் கடந்த ஏப். 6-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது 5 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர்.

திருமணத்துக்கு பிறகு, வரதட்சணை கேட்டு, புஷ்பாவை விவேகானந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தியாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புஷ்பா நேற்று முன் தினம் காலை தூக்கு போட்டு உயிரிழந்து விட்டதாக, அவரது குடும்பத்துக்கு விவேகானந்தன் தெரிவித்துள்ளார். இதுப்பற்றி தகவலறிந்த பாச்சல் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று புஷ்பாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக் காக தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சு.ஆண்டாப்பட்டு கிராமத்தில் வசிக்கும் புஷ்பாவின் தந்தை ஆறுமுகம் கொடுத்த புகாரில், வரதட்சணை கொடுமையால் புஷ்பாவை, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். எனவே, விவேகானந்தன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கிடையில், புஷ்பா வின் மரணத்துக்கு காரணமான வர்களை கைது செய்யும் வரை,உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என கூறி, தி.மலைஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முன்பு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் கைவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x