Published : 04 Jun 2022 10:53 AM
Last Updated : 04 Jun 2022 10:53 AM

தருமபுரி | மதுபோதையில் வாகனத்தை இயக்கியதால் மரத்தில் மோதி விபத்து: இருவர் பலி

தருமபுரி: தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே சாலையோர மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அரூர் வட்டம் பெரியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்(31). இவர் தருமபுரியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடன் வழங்கும் பிரிவில் பணியாற்றி வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(30). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று (வெள்ளி) இரவு அப்பகுதியில் நடந்த துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளனர்.

பின்னர் இருவரும் மந்திகுளாம்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனர். அதன்பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பியுள்ளனர். மந்திகுளாம்பட்டி-பெரியபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த புளிய மரம் ஒன்றில் இவர்களது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இன்று (சனி) அதிகாலை அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோட்டப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலங்களை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மது போதையில் இருசக்கர வாகனத்தை இயக்கிச் சென்று விபத்தில் சிக்கி 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரியபட்டி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x