விருத்தாசலம் | மது போதையில் ரயில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்ட 3 போலீஸார் உட்பட 5 பேர் கைது

ரயிலில் ரகளை செய்ததாக விருத்தாசலம் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள்.
ரயிலில் ரகளை செய்ததாக விருத்தாசலம் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: முத்துநகர் விரைவு ரயிலில், மது போதையில் ரயில் பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட 3 போலீஸார் உட்பட 5 பேரை விருத்தாசலம் ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

சென்னை- தூத்துக்குடி இடையே இடையே இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) இரவு 7.15 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. ரயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மது போதையில் இருந்த 5 பேர் பயணிகளை கேலி கிண்டல் செய்தும், ரகளையிலும் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அங்கிருந்த பயணி ஒருவர் விழுப்புரம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ரயில் விழுப்புரம் வந்து சேர்ந்த போதும் அங்கு எந்த போலீஸாரும் வரவில்லை.

இதனைத் தொடர்ந்து பயணிகள் விருத்தாசலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ரயில் இரவு 11 மணிக்கு விருத்தாசலம் சந்திப்பை வந்தடைந்த நிலையில், விருத்தாசலம் ரயில்வே உதவி ஆய்வாளர் சின்னப்பன் தலைமையிலான போலீஸார், குறிப்பட்ட எஸ் 3 பெட்டியில் ஏறி, விசாித்தனர். அப்போது, பயணிகளால் அடையாளம் காண்பிக்கப்பட்ட, மது போதையில் இருந்த 5 நபர்களை, போலீஸார் கீழே இறக்கி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாணிக்கராஜ், செந்தில்குமார், முருகன் ஆகியோர் சென்னை காவல் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் என்பதும் உடனிருந்த பொன்னுசாமி மற்றும் முத்துக்குமார் அவர்களது உறவினர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்ற ரயில்வே போலீசார், அவர்களை மருத்துவப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவப் பரிசோதனையில் 5 பேரும் மது அருந்தியிருந்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து, 5 பேர் மீதும் வழக்குப் பதிவுசெய்த ரயில்வே போலீஸார் அவர்களை, கைது செய்து, பின்னர் பிணையில் விடுவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in