செங்குன்றம் அருகே தனியார் லாரி பார்க்கிங் யார்டில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவர் கொலை

செங்குன்றம் அருகே தனியார் லாரி பார்க்கிங் யார்டில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவர் கொலை
Updated on
1 min read

செங்குன்றம்: செங்குன்றம் அருகே தனியார் லாரி பார்க்கிங் யார்டில் மதுபோதையில் தகராறு செய்த இருவர் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர், கிளீனர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள வடபெரும்பாக்கம், மாதவரம் நெடுஞ்சாலையில் தனியார் லாரி பார்க்கிங் யார்டு உள்ளது. இங்கு, சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக தமிழகம் மற்றும் பிற மாநில பகுதிகளில் இருந்து வரும் லாரிகள் நிறுத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த தனியார் லாரி பார்க்கிங் யார்டில் நேற்று முன்தினம் இரவு, வடபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன்(36), நவீன்(36), வடகரை பகுதியைச் சேர்ந்த குமரன்( 34 )ஆகியோர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கிருந்த உத்தரப்பிரதேச மாநில லாரி ஓட்டுநர் லாரியை எடுக்க முயற்சித்துள்ளார். ஆகவே, மதுபோதையில் இருந்த கமலக்கண்ணன் உள்ளிட்ட 3 பேரும், லாரி ஓட்டுநரிடம் வீண் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், கோபமடைந்த உத்தரப்பிரதேசம் மாநில லாரி ஓட்டுநர், கமலக்கண்ணன் உள்ளிட்ட 3 பேர் மீது லாரியை ஏற்றிவிட்டு, அங்கிருந்து, லாரி கிளீனருடன் தப்பியோடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த லாரி பார்க்கிங் யார்டில் இருந்த லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள், லாரி ஏற்றப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்த கமலக்கண்ணன், குமரன், நவீன் ஆகியோரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல முயன்றனர். அதற்குள் கமலக்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குமரன், நவீன் ஆகியோர் மீட்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரன் உயிரிழந்தார். நவீன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி தகவல் அறிந்து, அதிர்ச்சியடைந்த வடபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் லாரி பார்க்கிங் யார்டில் திரண்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த 5 லாரிகளின் கண்ணாடியை சேதப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

உ.பி.யைச் சேர்ந்த 2 பேர் கைது

இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த செங்குன்றம் போலீஸார், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

பின்னர், கமலக்கண்ணன், குமரன் ஆகிய இருவரை லாரியை ஏற்றி கொலை செய்தது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கண்ணையா லால் சிங்(33), கிளீனர் கிரீஷ்குமார்(29) ஆகியோரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in