Published : 03 Jun 2022 06:53 AM
Last Updated : 03 Jun 2022 06:53 AM

தஞ்சாவூர் | சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை உட்பட 2 பேருக்கு ஆயுள் சிறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான இரு சிறுமிகளின் தாய் சிறுவயதில் இறந்துவிட்டதால், இருவரையும் அவர்களது பாட்டியும், சித்தியும் அழைத்துச் சென்று வளர்த்து வந்தனர்.

2016-ம் ஆண்டில் இரு சிறுமிகளையும் அவர்களது தந்தை தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், மூத்த மகளான சிறுமிக்கு அவர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த தாத்தா முறையிலான 67 வயது உறவினர், இரு சிறுமிகளையும் தனது வீட்டில் தங்கவைத்தார். ஆனால், அவரும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன்பின்னர், சிறுமிக்கு தொடர்ந்து தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததால், கருவுற்ற சிறுமியின் கருவை கலைக்க தந்தை முயற்சித்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த அச்சிறுமியின் சித்தி, சிறுமிக்கு நேர்ந்த அவலம் குறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தந்தையையும், உறவினரையும் 2020, ஜூலை 1-ம் தேதி கைது செய்தனர். இதுதொடர்பாக தஞ்சாவூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை, உறவினருக்கு ஆயுள் சிறை தண்டனை, தலா ரூ. 50,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x