

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் தனியார் பள்ளி தாளாளர் கணேஷ் (எ) ஆப்பிள் கணேஷ். இவருக்கு திருமுருகன் மற்றும் கோகுல் என்ற 2 மகன்கள் உள்ளனர். திருமுருகன் 12-ம் வகுப்பு தேர்வு முடித்த நிலையில் கடந்த 24-ம் தேதி நண்பர்களுடன் ஆரணி காந்தி சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டார். அவரது நண்பர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட நிலையில் திருமுருகன் மட்டும் தந்தூரி சிக்கனையும் சேர்த்து சாப்பிட்டுள்ளார்.
அன்று இரவு முழுவதும் திருமுருகன் வயிற்று வலியால் துடித்துள்ளார். மறுநாள் காலையில் வீட்டின் அருகில் உள்ள தனியார் கிளீனிக்கில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், 29-ம் தேதி காலையில் அவருக்கு திடீரென வயிற்றுப்போக்கு அதிகம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், கணேஷ் ஆரணி நகர காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகாரில், தனது மகன் இறப்புக்கு காரணமான உணவக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனு மீது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உணவகம் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.