Published : 02 Jun 2022 06:02 AM
Last Updated : 02 Jun 2022 06:02 AM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, கந்திலி, ஜோலார்பேட்டை, உமராபாத், துத்திப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாக்கெட் சாராய விற்பனை அதிகளவில் நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர மது விலக்கு வேட்டையில் ஈடுபட்டனர். இதில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 287 லிட்டர் சாராயத்தை காவல் துறை யினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், 22 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 600 லிட்டர் சாராய ஊறல்களை அழித்த காவல் துறையினர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுகுமார் (45), பேரணாம்பட்டு அடுத்த கோட்டச் சேரியைச் சேர்ந்த திருமூர்த்தி (38), மணி (49) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT