கும்பகோணத்தில் கார் ஓட்டுநர் கொலை: 2 இளைஞர்கள் சரண்

கும்பகோணத்தில் கார் ஓட்டுநர் கொலை: 2 இளைஞர்கள் சரண்
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணத்தில் கார் ஓட்டுநர் நேற்று கொலை செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், மேலக்காவிரி விருமாண்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தினேஷ் (எ) தினகரன் (27). கார் ஓட்டுநரான இவர், நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியில் சென்றார். இந்நிலையில் பெருமாண்டி, பத்மநாதபுரம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தினகரன் உயிரிழந்து கிடந்துள்ளார். தகவலறிந்து சென்ற கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார், சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக கும்பகோணம் துக்கம்பாளையம் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் கார்த்தி (எ) ஹல்க்(21), மேலக்காவேரி செக்கடிதெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விஜயகுமார் என்ற கிரி(22) ஆகிய இருவரும் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் நேற்று மாலை சரணடைந்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நடத்திய முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் ஏற்பட்ட தகாராறில் இந்த கொலை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in