Published : 31 May 2022 01:15 AM
Last Updated : 31 May 2022 01:15 AM

கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

கோவை: பேரூரை அடுத்த பச்சாபாளையத்தில் உள்ள, ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை பேரூரை அடுத்த பச்சாபாளையத்தில், கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் எனப்படும் ஆவின் நிறுவனம் உள்ளது. இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பால் ஊற்றும் உறுப்பினர்கள் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 340-க்கும் மேற்பட்ட பிரதான கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் இருந்து, தினமும் ஏறத்தாழ ஒரு லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

தினமும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் லிட்டர் பால் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஆவின் தயாரிப்புகளான நெய், இனிப்புகள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக முன்னரே புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஆவின் நிறுவனத்தில் சோதனை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், ஆவினில் பணியாற்றும் 20 பேருக்கு பணி நிரந்தரம் செய்ய உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கூடுதல் எஸ்.பி திவ்யா தலைமையில் நேற்று (மே 30) மாலை பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு வந்தனர். பின்னர், போலீஸார் குழுவாக பிரிந்து, ஆவின் வளாகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளின் அறைகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

இதில் ரூ.8.40 லட்சம் வரை கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கூறும்போது, ‘‘பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனையின் முடிவில் முழு விவரமும் தெரிவிக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x