Published : 28 May 2022 06:40 AM
Last Updated : 28 May 2022 06:40 AM

கிருஷ்ணகிரி | விபத்தில் சிக்கிய வாகனத்தில் ரூ.6.82 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சாலை விபத்தில் சிக்கி இருந்த வேனை போலீஸார் சோதனை செய்தபோது, அதில் ரூ.6.82 லட்சம் மதிப்பிலான குட்கா இருந்ததை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரியில் பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், ஆவின் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த ஓட்டுநர், தப்பியோடினார்.

இதுதொடர்பாக தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி நகர காவல் உதவி ஆய்வாளர் சிவசுந்தர் மற்றும் போலீஸார் வாகனத்தை சோதனையிட்டனர். அதில், ரூ.6 லட்சத்து 82 ஆயிரத்து 504 மதிப்பிலான, 926 கிலோ புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், தப்பியோடிய வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர். குட்கா பொருட்களுடன் சரக்கு வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஓசூர்

ஓசூர் அருகே உள்ள அந்திவாடி சோதனைச்சாவடியில் மத்திகிரி போலீஸார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீஸார் சோதனை நடத்தினர்.

வாகனத்தில் ஓட்டுநரின் இருக்கை அருகே ரகசிய அறை இருந்ததை கண்டுபிடித்த போலீஸார், உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஓட்டுநரிடம் விசாரித்தபோது, அவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (23) எனத் தெரிந்தது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x