Published : 27 May 2022 06:05 AM
Last Updated : 27 May 2022 06:05 AM

வேலூர் | கல்லூரி மாணவர் அடித்துக்கொலை

வேலூர்: குடும்பத் தகராறில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டத்துக்கு உட்பட்ட சின்ன லத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தருண்குமார் (20). இவர், குடியாத்தம் அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது பெற்றோர் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால், தருண்குமார் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

அதே பகுதியில் உள்ள தருண்குமாரின் மாமா ரமேஷின் மகள் வேறு ஒரு நபருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதைப் பார்த்த தருண்குமார், அதுகுறித்து ரமேஷிடம் தெரிவித்தபோது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. திடீரென தருண்குமாரை, ரமேஷ் தாக்கியுள்ளார். இதை பெங்களூருவில் உள்ள பெற்றோரிடம் செல்போன் மூலம் தருண்குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சின்ன லத்தேரிக்கு நேற்று முன்தினம் வந்த தருண்குமாரின் தாய் கிரிஜா, ரமேஷின் வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளார். அப்போது, மீண்டும் ஏற்பட்ட தகராறில் தென்னை மட்டையால் கிரிஜா முன்னிலையில் தருண்குமாரை ரமேஷின் குடும்பத்தினர் தாக்கியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தருண்குமார் நேற்று காலை உயிரிழந்தார். இது தொடர்பான புகாரின்பேரில் லத்தேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரமேஷின் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x