Published : 22 May 2022 08:35 AM
Last Updated : 22 May 2022 08:35 AM

தெலங்கானாவில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு - தந்தை கண் முன்னே மகன் கொலை

நீரஜ் பன்வார், சஞ்சனா

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஷா ஹினாஜ் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்தர் பன்வார். கடலை வியாபாரி. இவரது மகன் நீரஜ் பன்வார் (24). இவரும், அதே பகுதியை சேர்ந்த சஞ்சனா (22) என்பவரும் தீவிரமாக காதலித்தனர். ஆனால், ஜாதி வேறு என்பதால் நீரஜ் பன்வாரை திருமணம் செய்ய கூடாது என்று சஞ்சனா வீட்டில் கண்டிப்பாக கூறிவிட்டனர். இதனால், கடந்த ஆண்டு சஞ்சனா வீட்டை விட்டு வெளியேறி நீரஜ் பன்வாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 2 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நீரஜ் பன்வாரும், அவரது தந்தை ராஜேந்தர் பன்வாரும் பைக்கில் பேகம் பஜார் மீன் மார்க்கெட் அருகே சென்ற போது, திடீரென 5 பேர் வழிமறித்து நீரஜ் பன்வாரை கத்தியால் குத்தி தந்தை கண் முன்னே கொலை செய்தனர்.

சஞ்சனா, ராஜேந்தர் பன்வார் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், தனது சகோதரன் மற்றும் உறவினர்களே நீரஜை கொலை செய்தனர் என்றும், அவர்களை தூக்கிலிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்று ஷாஜினாஜ் கஞ்ச் போலீஸ் நிலையம் முன் கைக்குழந்தையுடன் சஞ்சனா நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டார். இதனிடையே, போலீஸார் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் மறைந்திருந்த கொலையாளிகள் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x