Published : 19 May 2022 10:19 PM
Last Updated : 19 May 2022 10:19 PM

கரூர் | மானிய விலையில் ட்ராக்டர் வழங்க ரூ.22,500 லஞ்சம்: வேளாண் உதவிப் பொறியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை

கார்த்திக்

கரூர்: மானிய விலையில் ட்ராக்டர் வழங்க ரூ. 22,500 லஞ்சம் வாங்கிய வேளாண் உதவிப் பொறியாளருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதமும், அதனை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் வழங்கி கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்சி லிங்கம் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள பணிக்கம்பட்டியில் விவசாய நிலம் உள்ளது. இவர் விவசாய பணிகளுக்காக மானிய விலையில் ட்ராக்டர் வாங்குவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு குளித்தலை வேளாண் பொறியியல் உதவி பொறியாளர் கார்த்திக்கை (29) அணுகியுள்ளார். அப்போது அவர் ரூ.50,000 லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு தொகை தர முடியாது என மறுத்த சுரேஷ், பின்னர் முதல் கட்டமாக ரூ.22,500 வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இருந்தபோதிலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ், இதுகுறித்து கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து குளித்தலை வேளாண் பொறியியல் அலுவலகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நவ.5-ம் தேதி உதவி பொறியாளர் கார்த்திக்கிடம், சுரேஷ் ரூ.22,500 லஞ்சம் வழங்கிய போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் கார்த்திக்கை கைது செய்தனர். இதையடுத்து கார்த்திக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இது தொர்பான வழக்கு, கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் நீதிபதி சி.ராஜலிங்கம் இன்று (மே 19) வழங்கிய தீர்ப்பில், வேளாண் உதவி பொறியாளர் கார்த்திக்கிற்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஒராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x