Published : 19 May 2022 06:32 AM
Last Updated : 19 May 2022 06:32 AM

கோவை | ரயிலில் இருந்து வீசி குழந்தை கொலை? - மனைவியை தாக்கிவிட்டு தப்பிய கணவரிடம் விசாரணை

கோவை | ரயிலில் இருந்து குழந்தையை கணவர் வீசிவிட்டதாக மனைவி கூறிய புகாரின்பேரில், கணவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருக்கும் பெண் ஒருவர், மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை நேற்று தொடர்பு கொண்டு, தகராறு காரணமாக கணவர் தன்னை தாக்கிவிட்டு, கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டதால் தன்னை காப்பாற்றுமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து, ராமநாதபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அறையில் இருந்த பெண்ணை மீட்டு, விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த மாரிச்செல்வம்(27). கோவையில் கல்லூரி படிப்பை முடித்தவர். சொந்த ஊரில் பெற்றோர் எதிர்ப்பை மீறி கவிதா(21) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். மனைவி கர்ப்பமடைந்ததும், பிரசவத்துக்காக கோவைக்கு அழைத்து வந்து அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். கடந்த 3-ம் தேதி கவிதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் தம்பதி குழந்தையுடன் கடையநல்லூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அங்கு அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் குழந்தையுடன், சில நாட்களுக்கு முன்னர் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கோவைக்கு வந்துள்ளனர்.

ரயிலில் திண்டுக்கல் அருகே வரும்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த மாரிச்செல்வம் குழந்தையை ரயிலில் இருந்து தூக்கி வெளியே வீசியதாகவும் கவிதா தெரிவித்தார். கோவை விடுதியில் தங்கியிருந்தபோது தாக்கியதில் கவிதா மயங்கியதால், அவர் உயிரிழந்து விட்டார் என அச்சமடைந்த மாரிச்செல்வம், அறைக்கதவை பூட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டார். தற்போது மாரிச்செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை குறித்து இருவரிடமும் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x