Published : 17 May 2022 04:06 PM
Last Updated : 17 May 2022 04:06 PM

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை; கரூர் நீதிமன்றம் தீர்ப்பு

முதல் படம் கணேசன் | இரண்டாம் படம் முனியப்பன்

கரூர்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ள கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரைத்துள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் கொசூர் அருகேயுள்ள அணைக்கரைப்பட்டிச் சேர்ந்தவர்கள் கணேசன் (28) மற்றும் முனியப்பன் (23). இதன் அருகேயுள்ள மேட்டூரை சேர்ந்தவர் 23 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கணவரை பிரிந்து தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி சமைப்பதற்காக வயலில் விறகு பொறுக்கிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட அப்பெண்ணை கணேசன் மற்றும் முனியப்பன் இருவருக்கும் இரு சக்கர வாகனத்தில் தனியார் சோளக்காட்டிற்கு அழைத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது குறித்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கணேசன், முனியப்பன் ஆகியோரை கைது செய்தனர்.

இவ்வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் இன்று (மே 17ம் தேதி) தீர்ப்பளித்த நீதிபதி நசீமா பானு, பெண்ணை கடத்திய குற்றத்திற்காக இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும் அதனை கட்டத்தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும் அதனை செலுத்தத் தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்காங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் அதனை செலுத்தத்தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனையும் விதித்து இவற்றை குற்றவாளிகள் ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், மனநலம் பாதித்த பெண்ணுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிபதி நசீமா பானு பரிந்துரை செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x