Published : 17 May 2022 06:52 AM
Last Updated : 17 May 2022 06:52 AM

அரூரில் வழிப்பறி, திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

அரூர் வட்டத்தில் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்து 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 நபர் களை போலீஸார் கைது செய்தனர்.

அரூர் கடை வீதியில் உள்ள நகைக்கடையில் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை, அரூர் கீழானூரைச் சேர்ந்த இளைஞரை அரிவாளால் தாக்கி விட்டு செல்போன், பணம் பறிப்பு, கடந்த 10-ம் தேதி அரூரில் இருந்து ஈட்டியம்பட்டி கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற துரைசாமி (65) என்பவரை வழிமறித்து அரிவாளால் தாக்கி,இருசக்கர வாகனம் பறிப்பு, 11-ம் தேதி பச்சினம்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் இசாஜான் கழுத்தில் அணிந்து இருந்த ஒன்றே கால் பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு என்ற தொடர் குற்றங்களோடு, அரூர் வட்டத்தில் கோயில்கள், வீடுகளில் திருட்டு சம்பவங்களும் நடந்தன. இக்கும்பலை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் அரூர் போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அனுமன் தீர்த்தம் சோதனைச் சாவடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 நபர்களை பிடித்து விசாரித்ததில் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அரூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்த வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. மேலும், அவர்கள் திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த யுவராஜ் (24), விக்னேஷ் (20), அரூர் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என தெரிய வந்தது. இவர்களில் யுவராஜ் மீது ஏற்கெனவே 5 திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரிய வந்தது. மூவரும் மதுரையில் ஒன்றாக கூலி வேலை செய்துள்ளனர். போதிய வருமானம் இல்லாததால், 3 பேரும் அரூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து அரை கிலோ வெள்ளி பொருட்கள், இருசக்கர வாகனம் 1, ஆயுதங்கள் உள்ளிட்டற்றை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x