Published : 17 May 2022 06:24 AM
Last Updated : 17 May 2022 06:24 AM

ஆம்பூர் | காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்: சாவில் சந்தேகம் என தாயார் புகார்

ஆம்பூர்: காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாயார் கொடுத்த புகாரின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் அப்துல்ரகுமான்(27). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தன்னுடன் பணிபுரிந்து வந்த தேவலாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த சுப்புலட்சுமி(22) என்ற பெண்ணை அப்துல்ரகுமான் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது காதல் திருமணத் துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித் ததால், அப்துல்ரகுமான் தனது காதல் மனைவியுடன் தனிக்குடித் தனம் நடத்தி வந்தார். திருமணத்துக்கு பிறகு சுப்புலட்சுமி இஸ்லாமிய மதத்தை தழுவியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் சுப்புலட்சுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு சில மணி நேரங்களில் சுப்புலட்சுமி உயிரிழந்தார்.

இது குறித்து வந்த தகவலின் பேரில், சுப்புலட்சுமியின் தாயார் தனலட்சுமி மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு உயிரிழந்து கிடந்த தனது மகளை பார்த்து கதறி அழுதனர்.

இதற்கிடையே, சுப்புலட்சுமி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது தாயார் தனலட்சுமி உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அப்துல்ரகுமான்- சுப்புலட்சுமிக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x