Published : 17 May 2022 06:04 AM
Last Updated : 17 May 2022 06:04 AM

மதுரை | பூட்டியிருந்த வீடுகளில் திருடிய கொள்ளையன் உட்பட 2 பேர் கைது: 77 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட நகை களை பார்வையிட்ட மதுரை மாவட்ட எஸ்.பி., வீ.பாஸ்கரன்.

மதுரை: மதுரையில் பூட்டியிருந்த வீடுகளில் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வேலூரைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 77 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் நேற்று கருப்பாயூரணி காவல்நிலையத்தில் செய்தியாளர் களிடம் கூறும்போது, "கருப்பாயூரணி, ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் உள்ள பூட்டியிருந்த 2 வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகுந்த நபர்கள் 77 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.

தனிப்படை அமைப்பு

இச்சம்பவத்தில் தொடர்புடை யவர்களைப் பிடிக்க எஸ்ஐ ஆனந்த் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. தனிப் படையினர் திருட்டு சம்பவம் நடந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் இறைவன்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற திருப்போரூர் மணி (45), அவரது நண்பர் தமிழ்க்குமரன் என்ற ஹரி (26) ஆகியோரை பிடித்து விசாரித்ததில் இச்சம்பவங்களில் தொடர்புள்ளதை ஒப்புக் கொண்டனர். மணிகண்டன் மீது ஏற்கெனவே தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 80-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.

இவர்களிடமிருந்து 77 பவுன் தங்க நகைகள் மற்றும் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவான லோகேஷ் என்பவரை தேடி வருகிறோம். துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த தனிப்படையினருக்கு வெகுமதி அளிக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x