Last Updated : 14 May, 2022 11:54 AM

 

Published : 14 May 2022 11:54 AM
Last Updated : 14 May 2022 11:54 AM

குன்றத்தூரில் தொழிலதிபர் வீட்டில் சுமார் 100 சவரன் நகை கொள்ளை: போலீஸார் விசாரணை

சென்னை: தாம்பரம் காவல் ஆணையகரகத்துக்குட்பட்ட குன்றத்தூரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த சுமார் 100 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

குன்றத்தூரை அடுத்த மணிகண்டன் நகர், பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆசாத்(42). இவர் அனகாபுத்தூர் சர்வீஸ் சாலை பகுதியில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மே 8-ம் தேதி ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர், பெங்களூர் சென்றிருந்தனர்.

இந்நிலையில் பெங்களூரிலிருந்து இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் மாட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் உள்ளே இருந்து பீரோவின் லாக்கரும் உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆசாத் குன்றத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது பூட்டியிருந்த வீட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் லாக்கரை உடைத்து சுமார் 100 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

கொள்ளை நடந்த வீடு

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளை நடந்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வெளியூருக்குச் சென்று திரும்பிய தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x