

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பண்டிட் சமூகத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் நேற்று தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டம் சடூரா பகுதியில் தாலுகா அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நேற்று பிற்பகலில் 2 தீவிரவாதிகள் இந்த அலுவலத்தினுள் புகுந்து ராகுல் பட் என்ற ஊழியரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் படுகாயம் அடைந்த ராகுல் பட், ஸ்ரீநகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இந்த ஊழியர் காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். ஜம்மு காஷ்மீரில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் முதல் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.