Published : 13 May 2022 08:23 AM
Last Updated : 13 May 2022 08:23 AM

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம் கேட்டதால் இளைஞர் தற்கொலை: நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்

திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் நேற்று மறியலில் ஈடுபட்ட மணிகண்டனின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போலீஸார்.

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(30). கட்டிடத் தொழிலாளி. இவர் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பித்திருந்தார்.

இதற்கான தொகை ரூ.2.70 லட்சம், 6 தவணைகளாக விடுவிக்கப்படும். இதில், முதல் தவணை மற்றும் 2-வது தவணைத் தொகையை விடுவிக்க, மணிகண்டனிடம் நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளர் (ஓவர்சியர்) மகேஸ்வரன் ரூ.18 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதை மணிகண்டன் கொடுத்திருந்த நிலையில், 3-வது தவணைத் தொகையை விடுவிக்காமல் மகேஸ்வரன் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. அதன்பின்பு, அந்தத் தொகையை வழங்க மேலும் ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மகேஸ்வரன் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாடு செல்ல வைத்திருந்த பணத்தை வைத்தும், கடன் வாங்கியும் வீடு கட்டி வந்த நிலையில், மேற்பார்வையாளர் மகேஸ்வரன் தவணைத் தொகையை விடுவிக்காமல் இழுத்தடித்து வந்ததால் மனமுடைந்த மணிகண்டன், நேற்று முன்தினம் மாலை வீட்டில் விஷம் குடித்துள்ளார். அப்போது, பணி மேற்பார்வையாளர் மகேஸ்வரன் லஞ்சம் வாங்கியது தொடர்பாக வீடியோ பதிவையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதையறிந்து, அவரை மீட்ட உறவினர்கள், காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் நேற்று அதிகாலை உயிர்இழந்தார். இதுகுறித்து பேரளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மகேஸ்வரனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொல்லு மாங்குடியில் மணிகண்டனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x