

பாலக்கோடு வட்டம் திருமல்வாடி அடுத்த பெல்லு அள்ளி கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் மகன் சிவப்பிரகாசம் (32). இவர் சொந்த ஊரிலேயே மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவியருக்கு டியூசன் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி இரவு இவர் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் இணைந்து காவல்துறைக்கு தகவல் அளிக்காமல் ரகசியமாக சடலத்தை தகனம் செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருமல்வாடி வருவாய் கிராமத்தின் நிர்வாக அலுவலர் மாதப்பன் (35) மாரண்ட அள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சிவப்பிரகாசத்தின் தாயார் முத்துலட்சுமி, சகோதரி சிவகாமி, உறவினர்கள் பிரகாஷ், மணி, சேட்டு, செல்வம், முருகன், ஆர்.சேட்டு, மாரி ஆகிய 9 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.