Published : 12 May 2022 06:56 AM
Last Updated : 12 May 2022 06:56 AM

மயிலாடுதுறை | விஷம் குடித்து முதியவர் தற்கொலை: பெண் காவல் ஆய்வாளர் மீது குற்றம் சாட்டி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதற்கு பெண் காவல் ஆய்வாளர் அவமரியாதை செய்ததே காரணம் எனக் குற்றம்சாட்டி, முதியவரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் தேரிழந்தூர் சிவன் கோயில் வடக்குவீதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன்(60). ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இவரது மகன்கள் ஜெயவசந்தன், ஜெயசீலன். ஆட்டோ ஓட்டுநரான ஜெயசீலன், நாம் தமிழர் கட்சியின் ஒன்றியச் செயலாளராக உள்ளார்.

இந்நிலையில், ஜெயவசந்தனுக்கும், அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வரும் மணிகண்டன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், இருதரப்பினர் மீது குத்தாலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், மணிகண்டனின் கடையில் கள்ளநோட்டு வைத்துவிட்டுச் சென்றதாக ஜெயசீலன் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஜெயசீலனைப் பிடிப்பதற்காக, அவரது வீட்டுக்குச் சென்ற குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி, அங்கிருந்த ஜெயசீலனின் தந்தை அர்ஜூனனை தகாத வார்த்தைகளால் பேசி அவமரியாதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, அர்ஜூனன் விஷம் குடித்துவிட்டதாக மயிலாடுதுறை மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அர்ஜூனன் உயிரிழந்தார்.

இதையடுத்து, அர்ஜூனனை அவமரியாதையாக நடத்திய காவல் ஆய்வாளர் வள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஜெயசீலன், ஜெயவசந்தன் ஆகியோர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்படுவதைக் கண்டித்தும் அர்ஜூனனின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த டிஎஸ்பிக்கள் வசந்தராஜ், லாமேக் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, அர்ஜூனன் தற்கொலை குறித்தும், ஜெயசீலன், ஜெயவசந்தன் மீதான வழக்குகள் குறித்தும் வேறு காவல் ஆய்வாளர் மூலம் நேர்மையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால், அர்ஜூனனின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, அவரது உடலை வாங்கிச் சென்றனர்.

வேறு காவல் ஆய்வாளர் மூலம் நேர்மையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x