Published : 11 May 2022 07:48 AM
Last Updated : 11 May 2022 07:48 AM

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்க கணவர், அவரது நண்பருடன் சேர்ந்து தந்தையை கொன்றேன்: மதுரை தொழிலதிபர் கொலையில் வளர்ப்பு மகள் வாக்குமூலம்

நிவேதா, அவரது கணவர் ஹரிகரன், நண்பர் சுரேஷ்.

மதுரை: மதுரை சொக்கிகுளம் கமலா 2-வது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணாராம்(73). தொழிலதிபர். இவரது மனைவி பங்கஜவல்லி(68). இவர்களுக்கு குழந்தை இல்லாததால் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிவேதா என்ற பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர்.

இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நிவேதா காரைக்குடி மானகிரியைச் சேர்ந்த ஹரிகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்புநிவேதாவுக்கும், வளர்ப்பு தந்தை கிருஷ்ணாராமுக்கும் தகராறு ஏற்பட்டதில் நிவேதாவும்,அவரது கணவரும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், கடந்த 9-ம் தேதி இரவு மாடி அறையில் இருந்த கிருஷ்ணாராம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், தல்லாகுளம் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதில் கிருஷ்ணாராமின் வளர்ப்புமகள் நிவேதா, கணவர் ஹரிகரன், அவரது நண்பர் மானாமதுரை சுரேஷ் ஆகியோர் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில்கிருஷ்ணாராமை கொலை செய்தது தெரியவந்தது. 3 பேரையும் தல்லாகுளம் போலீஸார் கைதுசெய்தனர். சுரேஷ் மீது ஏற்கெனவே கொலை உள்ளிட்ட பல்வேறுவழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

போலீஸாரிடம் நிவேதா அளித்த வாக்குமூலம்: ஆரம்பத்தில் எனது காதல் திருமணத்தை ஏற்க மறுத்த வளர்ப்பு தந்தை கிருஷ்ணாராம், கர்ப்பிணியாகி வீட்டுக்கு வந்தபோது ஏற்றுக் கொண்டார். எங்களுக்கு குழந்தை பிறந்து இறந்த நிலையிலும் வீட்டில் இருந்தோம்.

எங்களுக்கு ஜூஸ் கடை வைத்துக் கொடுத்தார். ஆனாலும், சொந்தமாக தொழில்புரிய, கார் வாங்க பணம் கேட்டேன். அவர் தர மறுத்தார். இதுதொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் எங்களை வீட்டைவிட்டு வெளியேற்றினார். அவர் உயிருடன் இருந்தால் சொத்துகளை அனுபவிக்கமுடியாது என நினைத்தோம். இந்நிலையில், அவர் அறக்கட்டளைக்கு சொத்துகளை எழுதி வைக்க திட்டமிட்டார்.

இதையடுத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்க தந்தையைகொல்ல திட்டமிட்டேன். என் திட்டத்தை கணவர், அவரது நண்பர் சுரேஷிடம் தெரிவித்தபோது அவர்கள் ஒப்புக் கொண்டனர். கடந்த 9-ம் தேதி இரவு 10 மணிக்கு நானும்,சுரேஷும் வீட்டுக்குள் சென்றோம். கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த என் தந்தையை கொலை செய்து பீரோவில் இருந்த 23 பவுன் நகை, பணத்தை எடுத்துக் கொண்டு தப்பினோம் எனக் கூறியுள்ளார்.

கொலை நடந்த 24 மணி நேரத்தில் கொலையாளிகளை கைதுசெய்த உதவி ஆணையர் சுரேஷ்குமார், ஆய்வாளர் பாலமுருகன், காவல் உதவி ஆய்வாளர்கள் சண்முகநாதன், அதிகுந்த கண்ணன் அடங்கிய தனிப்படையை காவல் ஆணையர் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x