

சிவகங்கை சைபர் கிரைம் போலீஸார் குற்றவாளிகளின் வங்கிக் கணக்கில் இருந்து முடக்கிய ரூ.50 லட்சத்தை சட்டப் பிரச்சினையால் பறி கொடுத்தவர்களுக்கு வழங்கு வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. வங்கி அதிகாரி போல் பேசி, ஓடிபி எண்ணை பெற்று மோசடி செய்வது, ஆன்லைன் லிங்குகளை அனுப்பி விவரங்களைப் பதிவு செய்ய வலியுறுத்தி மோசடி செய்வது, பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகவும், விலையுயர்ந்த பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறி மோசடி செய்வது எனப் பல்வேறு வழிகளில் மோசடி செய்து வருகின்றனர்.
இதுபோன்ற குற்றங்களில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்டந்தோறும் காவல் துறையில் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் அதிகளவில் வங்கி கணக்கை முடக்கியுள்ளனர். மொத்தம் 40 வழக்குகளில் இதுவரை ரூ.50 லட்சத்துக்கும் மேல் பணத்தை முடக்கியுள்ளனர். ஆனால் பெரும்பாலும் வங்கி கணக்குகள் உத்தரப்பிரதேசம், ஹரியாணா, டெல்லி போன்ற மாநிலங்களில் உள்ளன.
இதனால் வங்கி கணக்குகள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை. மேலும் முடக்கிய வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க சம்பந்தப்பட்ட வங்கிகள், நீதிமன்ற உத்தரவை கேட்கின்றன.
இந்த வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்காததால், அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதில் நீதிமன்றங்களுக்கும் சிக்கல் உள்ளது.
இந்த சட்டப் பிரச்சினையால் ஆன்லைனில் பறி கொடுத் தவர்களுக்கு, பணத்தை திருப்பி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.