Published : 05 May 2022 07:22 PM
Last Updated : 05 May 2022 07:22 PM

சிகிச்சைக்கு வந்தவர் கொல்லப்பட்ட சம்பவம்: சென்னை - ராயப்பேட்டை போதை மறு வாழ்வு மையத்திற்கு சீல்

சென்னை: சிகிச்சைக்கு வந்தவர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, சென்னை - ராயப்பேட்டையில் உள்ள மெட்ராஸ் கேர் மறுவாழ்வு மையத்திற்கு தமிழ்நாடு மனநல ஆலோசனை ஆணையத்தினர் சீல் வைத்தனர்.

சென்னை ராயப்பேட்டை, டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராஜி (45). இவர் ஆட்டோவுக்கு கூண்டு கட்டும் வேலை செய்துவந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவரை ராயப்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் அவரின் குடும்பத்தினர் சேர்த்தனர்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அதிகாலை ராஜியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் அவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜியின் மனைவி கலா, குடும்பத்தினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவருடைய மனைவி அளித்த புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையினர். ராஜியை கட்டையால் அடித்து கொலை 7 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைத்து மாநில மனநல ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஆணையத்தினர் கூறுகையில், "ராயப்பேட்டையில் இயங்கிய மெட்ராஸ் கேர் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 உள்நோயாளிகள் மீட்கப்பட்டு கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் அனுமதிப்பட்டுள்ளனர். இந்த மையத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிமம் பெறாமல் போதை மீட்பு மறுவாழ்வு மையங்கள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிமம் பெறாத மையங்கள், விதிகளை மீறும் மையங்கள் குறித்து பொதுமக்கள் புகார்களை மாநில மனநல ஆணையத்தில் அளிக்கலாம். புகார் தாரர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x