சேலம் | பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சேலம் | பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Updated on
1 min read

சேலத்தில் தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை மூங்கப்பாடி பகுதியைச் சேர்ந்த பத்மாவதியிடம் கடந்த மார்ச் மாதம் மர்ம நபர்கள் 4 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் ஜார்ஜிசோலி நிதியான் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிப் அலி (23), அதே பகுதியைச் சேர்ந்தவர் ஷபிசேக் (30) ஆகியோரைக் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளாக சூரமங்கலம், பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி பகுதிகளில் மொத்தம் 25 பவுன் தங்க நகையை பறித்துள்ளது தெரியவந்தது. மேலும், இருசக்கர வாகனங்களையும் திருடியுள்ளனர்.

கைதான இருவர் மீதும் சேலம் மாநகரம் மற்றும் தருமபுரி மாவட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தொடர்ந்து இருவரும் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்ததால், இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாநகர துணை காவல் ஆணையர் மோகன்ராஜ் பரிந்துரை செய்தார்.

இதனை மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா ஏற்று, இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in