திருத்தணி | கடத்தப்பட்ட நிதி நிறுவன முகவர் மீட்பு: 2 பேர் கைது

திருத்தணி | கடத்தப்பட்ட நிதி நிறுவன முகவர் மீட்பு: 2 பேர் கைது
Updated on
1 min read

திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, சென்னை- பைபாஸ் சாலையில் வசிப்பவர் லோகநாதன்(35). இவர், தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் முகவராக இருந்து, பொதுமக்களிடம் பணத்தை வசூலித்து, அதை நிறுவனத்தில் வைப்புத் தொகையாக வைத்து, மாதந்தோறும் அவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் வட்டியை அளித்து வந்துள்ளார்.

திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வைப்புத் தொகையாக நிதி நிறுவனத்தில் பல நூறு கோடி ரூபாய் செலுத்திய நிலையில், நிதி நிறுவன நிர்வாகிகள், நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இச்சூழலில், நேற்று முன்தினம் மாலை லோகநாதன், தன் வீட்டு வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்தபோது, அவரை மர்ம நபர்கள் இருவர் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, லோகநாதனின் சகோதரர் பாலாஜி அளித்த புகாரின் அடிப்படையில், திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கடத்தல் கும்பலை பிடிப்பதற்காக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அரக்கோணத்திலிருந்து, திருத்தணி நோக்கி வந்த காரை போலீஸார் மடக்கி சோதனை செய்தனர். அச்சோதனையில், காரில் இருந்த 3 பேரில் ஒருவர் லோகநாதன் என்பது தெரியவந்தது. உடன் வந்த பால்ராஜ்(33), சதீஷ்குமார்(31) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பால்ராஜ் வழக்கறிஞர் என்பதும், சதீஷ்குமார் சட்டக்கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் லோகநாதனை கடத்தி, நிதி நிறுவனத்தில் வைப்புத் தொகை செலுத்தியவர்களில் ஒரு பிரிவினருக்கு பணத்தை திருப்பித் தர வேண்டும் என மிரட்டியது தெரியவந்தது.

இதையடுத்து, லோகநாதனை மீட்ட போலீஸார் பால்ராஜ், சதீஷ்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார், நாட்டுத் துப்பாக்கி, 2 ஆக்சா பிளேடுகளை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in