Published : 29 Apr 2022 06:02 AM
Last Updated : 29 Apr 2022 06:02 AM

தண்டராம்பட்டு அருகே தட்டரணை கிராமத்தில் சாராயம் காய்ச்சியதாக கைது செய்யப்பட்டவர் மரணம்: அடித்து கொலை செய்துவிட்டதாக ஆட்சியரிடம் புகார்

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நீதி கேட்டு கதறி அழுத தங்கமணியின் உறவினர்கள்.

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் இளையாங்கண்னி அடுத்த தட்டரணை கிராமத்தில் வசித்தவர் தங்கமணி. இவரை, சாராயம் காய்ச்சியதாக கூறி தி.மலை மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் கடந்த 26-ம் தேதி கைது செய்துள்ளனர்.

பின்னர், திருவண்ணா மலை கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். அங்கு அவரது உடல்நிலை மறுநாள் (27-ம் தேதி) மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்கமணியை, தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்க மணியை காவல் துறையினர் மற்றும் சிறைத் துறையினர் கடுமையாக தாக்கியதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், ஆட்சியரை சந்தித்துமுறையிடப் போவதாக தகவல்வெளியானது. இதனால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். நுழைவு வாயில் முன்பு தடுப்புகள் போடப்பட்டு, கதவுகளும் மூடப்பட்டன.

ஆட்சியரை சந்திக்க வந்த உயிரிழந்த தங்கமணியின் உறவினர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம், தங்கமணியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறினர். ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அதன்பிறகு, தங்கமணியின் மனைவி உள்ளிட்ட முக்கிய நபர்கள் மட்டும் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். அதன் பேரில் ஆட்சியர் பா.முருகேஷை சந்திந்து மனு அளித்தனர்.

உள்படம்: உயிரிழந்த தங்கமணி.

தங்கமணியின் மனைவி மலர் அளித்துள்ள மனுவில், “நாங்கள் பழங்குடி மலைக் குறவன் இனத்தைச் சேர்ந்த வர்கள் . எங்கள் கிராமத்தைச் சேர்ந்த யாரும் கடந்த 2012-ல் இருந்து சாராயம் காய்ச்சுவ தில்லை. கரோனா காலத்தில் வெளியூர் நபர்கள் காய்ச்சினர். இந்நிலையில், கிராம மக்களை தொடர்பு கொண்ட தி.மலை மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர், சாராயம் காய்ச்ச வேண்டும், மாதம் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறி கிராம மக்களை வலியுறுத்தினர். பணம் கொடுக்க மறுத்ததால் 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்துவிட்டனர்.

இதேபோல், எனது கணவர் தங்கமணியையும் மிரட்டினர். மேலும், எனது கணவர் தங்கமணியை கடந்த 26-ம் தேதி இரவு இழுத்து சென்று கைது செய்தனர். அவரை விடுவிக்க ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும், தவறினால் குண்டர் சட்டத்தில் கைது செய்துவிடுவோம் என மிரட்டினர். நாங்கள் பணம் தர மறுத்ததால், அவர் மீது பொய் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்துவிட்டனர். அங்கு அவரை, சிறைத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

எனது கணவர் உயிரிழப்புக்கு லாக்-அப் மரணம்தான் காரணம். இதற்கு காரணமான வர்கள் மீது தகுந்த நடவக்கை எடுத்து, எங்களுக்கு நீதி வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட தங்கமணியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கமணியின் இறப்புக்கு காரணமான காவல்துறையினர் மற்றும் சிறைத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை பெறப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x