

பொள்ளாச்சி - உடுமலை சாலை தேர்நிலையம் அருகே உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று வந்த நபர், தன்னை உணவுப் பாதுகாப்பு அதிகாரி என ஊழியர்களிடம் தெரிவித்து, அதற்குரிய அடையாள அட்டையை காண்பித்து, உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த உணவக மேலாளர் ஷேக் முகமது (63) பொள்ளாச்சியில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்புராஜை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உணவகத்தில் ஆய்வு நடத்திய நபர், போலி ஆசாமி என தெரியவந்தது. அந்நபரை பிடித்து, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில் அந்நபர், பொள்ளாச்சி சின்ன நெகமம் என்.சந்திராபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (47) என்பதும், கோவையில் உள்ள மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. முருகேசனை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.2.61 லட்சத்தையும், இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.