

நாமக்கல்: விவசாயியை மிரட்டி பணம் பறித்த வழக்கில், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2500 அபராதம் விதித்து ராசிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் கொளஞ்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (48). இவருக்கும் இவரது உறவினர் சவுந்திரராஜன் என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்துள்ளது.
இது தொடர்பாக, கடந்த 2008-ம் ஆண்டு வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் சவுந்திரராஜன் புகார் அளித்துள்ளார். அப்போது, அங்கு காவல் ஆய்வாளராகப் பணி யாற்றிய சுப்பிரமணியம், வேலுவை காவல் நிலையம் அழைத்து விசாரித்துள்ளார்.
அப்போது, வேலுவை மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.5500 பணத்தை ஆய்வாளர் பறித்துள்ளார். இதுதொடர்பாக, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வேலு புகார் அனுப்பியும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் சுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேலு வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ரெகனா பேகம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். இதில், காவல் ஆய்வாளர் சுப்பிரமணி யத்துக்கு, இரண்டரை ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2500 அபராதமும் விதித்தார். அவருக்கு ஜாமீன் வழங்கியும் உத்தர விட்டார்.
இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் தற்போது பணி ஓய்வு பெற்றுள்ளார். இவர் வாச்சாத்தி பாலியல் வன் கொடுமை வழக்கில் தொடர்புடையவர் என்பதும், ஓய்வு பெறும் சில நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.