திருச்சி | செல்போன் செயலி மூலம் கடன் வாங்கியவருக்கு ‘மார்பிங்’ படங்களை அனுப்பி மிரட்டல்

திருச்சி | செல்போன் செயலி மூலம் கடன் வாங்கியவருக்கு ‘மார்பிங்’ படங்களை அனுப்பி மிரட்டல்
Updated on
1 min read

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள இடஞ்சிமங்களம் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் சுரேஷ்குமார்(21). சிமென்ட் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர், செல்போன் செயலி மூலம் விண்ணப்பித்து ரூ.2,500 கடன் பெற்றுள்ளார். அதன்பின் அவர் வட்டியுடன் ரூ.3,900 திருப்பிச் செலுத்தியுள்ளார். ஆனால் அந்த செயலியை பராமரிக்கக்கூடியவர்கள் மேலும் ரூ.1,900 செலுத்துமாறு கூறியுள்ளனர்.

அதற்கு சுரேஷ்குமார் மறுத்துள்ளார். இந்த சூழலில் சுரேஷ்குமார் பெண் ஒருவருடன் சேர்ந்திருப்பதுபோல மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்களை அவரது செல்போன் வாட்ஸ் அப் எண்ணுக்கு 8-க்கும் மேற்பட்ட வெவ்வேறு எண்களில் இருந்து அனுப்பி, பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து திருச்சி மாநகர சைபர் கிரைம் பிரிவில் சுரேஷ்குமார் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in