Published : 21 Apr 2022 08:05 AM
Last Updated : 21 Apr 2022 08:05 AM

யூ டியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ் மகன் தனபால் (24). இருசக்கர வாகன பழுதுநீக்கும் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவர், 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் நேற்று முன்தினம் இரவு தனபால் வீட்டுக்குச் சென்று கண்டித்தபோது, அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்துவிடுவதாக தனபால் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அன்று இரவே தனபால் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர். இதில், அவர் 23 நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், கிராமப் பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை வெடிவைத்து பிடிப்பதற்காக யூ டியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டுகளை அவர் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, தனபாலை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x