

சென்னை மதுரவாயல் கிருஷ்ணாநகரைச் சேர்ந்த சதீஷ்குமார், திருவள்ளூர் மாவட்ட பாஜக செயலராகப் பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது கார் நேற்று முன்தினம் தீப்பிடித்து எரிந்தது.
மர்ம நபர்கள் காருக்கு தீ வைத்ததாக செய்தி வெளியானது. மதுரவாயல் போலீஸார் அங்கிருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பெட்ரோல் ஊற்றி, சதீஷ்குமாரே காருக்கு தீவைத்தது தெரியவந்தது.
போலீஸார் விசாரித்ததில், தனது மனைவி காரை விற்று நகை வாங்கித் தருமாறு வற்புறுத்தியதால், கோபத்தில் தனது காரை தானே தீவைத்துக் கொளுத்தியதாக சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார், காவல் நிலைய ஜாமீனில் விடுதலை செய்தனர்.