Published : 16 Apr 2022 06:25 AM
Last Updated : 16 Apr 2022 06:25 AM

கோவை: சிறுவன் உட்பட மூன்று பேரை கடத்திய நால்வர் கைது

கோவை: கோவை அருகே, முன்விரோதம் காரணமாக, சிறுவன் உட்பட மூன்று பேரை கடத்திய நால்வரை கோவில்பாளையம் போலீஸார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹோலி கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷாஸாத். பழைய எலக்ட்ரிக்கல் பொருள் ஸ்கிராப் தொழில் செய்து வந்தார்.

இவருக்கு தொழில் ரீதியாக பெங்களூரைச் சேர்ந்த ஹசீம் அகமது என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவரிடம் வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கிடையே பணம் விவகாரம் காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி மதியம் முகமது ஷாஸாத், கோவையில் இருந்து கீரணத்தம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார்.

காரில் அவரது மகன் முகமது ஷைப்(14), உறவினர் முகமது யாசின் உள்ளிட்டோரும் இருந்தனர். கீரணத்தம் அருகே சென்றபோது, மற்றொரு காரில் வந்த 4 பேர் இவர்களது காரை வழிமறித்து, முகமது ஷாஸாத், முகமது ஷைப், முகமது யாசின் ஆகிய மூவரையும் கடத்திச் சென்றனர். பின்னர், சிறிது நேரத்தில் அவர்களிடம் இருந்து தப்பிய முகமது ஷாஸாத் கோவில்பாளையம் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீஸார், அத்திபாளையம் சாலையில் நேற்று ரோந்து சென்றபோது, இரண்டு கார்களை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர்.

காரில் இருந்தவர்கள், மூவரை கடத்திய வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த ஹபீப் அகமது(34), சையது அஷ்ரப் (32), சுபையர் அகமது (27), முகமது மொஷின் (25) என தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். சிறுவன் முகமது ஷைப் மற்றும் முகமது யாசின் ஆகியோரை மீட்டு, காரை பறிமுதல் செய்தனர்.

கடத்தப்பட்டவர்கள் 36 மணி நேரத்துக்குள் மீட்கப்பட்டு, கடத்தியவர்களை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x