

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா உத்தரவின்பேரில், வனச்சரக அலுவலர் பிரபு மற்றும் வனத்துறையினர் ஜவ்வாதுமலை வனப்பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் இருந்த மூதாட்டியை பிடித்து விசாரணை செய்ததில், அவர் திருப்பத்தூர் அடுத்த மட்றப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மனைவி ராணி (62) என்பது தெரியவந்தது. இவர், வனப்பகுதிகளில் வளரும் சந்தன மரத்தை அவ்வப்போது சிறு,சிறு துண்டாக வெட்டி சேகரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராணியை கைது செய்தனர். மேலும், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். முன்னதாக ராணி சிறுக, சிறுக சேகரித்து தனது வீட்டில் பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 6 கிலோ சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.