அரியலூரில் தம்பியை கொன்ற அண்ணன் கைது

அரியலூரில் தம்பியை கொன்ற அண்ணன் கைது
Updated on
1 min read

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன்கள் முருகானந்தம்(38), ரமேஷ்(32). இதில், முருகானந்தம் திருச்சி சமயபுரத்தில் உள்ள அலுமினிய கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ரமேஷ், கீழப்பழுவூரில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வெல்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முருகானந்தம் மனைவியிடம் ரமேஷ் தவறாக நடக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், முருகானந்தம் மற்றும் ரமேஷ் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முருகானந்தம், அருகில் கிடந்த கட்டையால் தாக்கியதில் ரமேஷ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கீழப்பழுவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முருகானந்தத்தை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in