Published : 08 Apr 2022 07:25 AM
Last Updated : 08 Apr 2022 07:25 AM

சென்னையில் ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவியை கடத்திய பெண் உட்பட இருவர் கைது

சென்னை: சென்னையில் ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவியைக் கடத்திய பெண் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

வடபழனியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரின் 15 வயது மகள், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த மாணவியை ஏமாற்றி, ஒரு பெண் கடத்திச் சென்றுள்ளார். மேலும், மாணவியின் தந்தையிடம் ரூ.10 லட்சம் கேட்டு செல்போனில் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆயிரம் விளக்கு போலீஸில் புகார் அளித்தனர்.

இதற்கிடையில், மாணவியின் தந்தைக்கு மீண்டும் செல்போன் அழைப்பு வந்துள்ளது. தன்னிடம் ரூ.2 லட்சம் மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்தார். அந்தப் பணத்தை வடபழனியில் உள்ள பர்னிச்சர் கடையில் கொடுத்துவிட்டு, மகளை அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

அந்தப் பணத்தை கடையில் உள்ள ஒருவரிடம் கொடுத்த நிலையில், மீண்டும் போன் செய்து, வடபழனி சிக்னல் அருகில் மகள் நின்று கொண்டிருப்பதாக கூறி, இணைப்பை துண்டித்துவிட்டனர். இதையடுத்து, மாணவி மீட்கப்பட்டார்.

இந்நிலையில், பர்னிச்சர் கடையை போலீஸார் மறைந்திருந்து கண்காணித்தபோது, பர்தா அணிந்த பெண் ஒருவர் பணத்தை வாங்குவதைப் பார்த்த போலீஸார், அந்த பெண்ணையும், கடை உரிமையாளரையும் கைது செய்தனர்.

விசாரணையில், கடத்தலில் ஈடுபட்ட பெண் ராயப்பேட்டையைச் சேர்ந்த மோசினா பர்வீன் (34) என்பதும், கடை உரிமையாளர் இஜாஸ் அகமது(52) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்டுள்ள மோசினா பர்வீன் நடத்தி வந்த மழலையர் பள்ளி, கரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது. இதனால் ரூ.10 லட்சம் கடன் வாங்கிய அவர், அதை அடைப்பதற்காக, இஜாஸ் அகமதுவுடன் கடத்தலில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட மாணவியை 3 மணி நேரத்தில் மீட்டதுடன், கடத்தலில் ஈடுபட்டவர்களையும் கைது செய்த தனிப்படை போலீஸாரை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x