Published : 07 Apr 2022 08:22 AM
Last Updated : 07 Apr 2022 08:22 AM

தூத்துக்குடி அருகே படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயற்சி; ரூ.16 கோடி ‘மெத்தாம்பேட்டமைன்’ போதைப் பொருள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.16 கோடி மதிப்பிலான ‘மெத்தாம்பேட்டமைன்’ என்ற போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி கடற்கரைப் பகுதி வழியாக இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலம் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார், சுங்கத் துறை, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை, கியூ பிரிவு போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் என பல்வேறு துறையினரும், கடற்கரைப் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கடற்கரை வழியாக இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று முன்தினம் இரவில் தீவிர கண்காணிப்பு பணி நடந்தது.

கடற்கரையில் சந்தேகமான வகையில் படகு ஒன்று நிற்பதை கண்ட அதிகாரிகள் அங்கு சென்றனர். படகில் இருந்தவர்கள் தப்பிஓடிவிட்டனர். படகில் பாலித்தீன் பாக்கெட்டுகளில் ரசாயனப் பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதை பரிசோதித்து பார்த்தபோது அது, 'கிறிஸ்டல் மெத்தாம்பேட்டமைன்' என்ற போதைப் பொருள் என்பது உறுதி செய்யப்பட்டது.

படகில் இருந்த 5 கிலோ 200 கிராம் எடையுள்ள 'கிறிஸ்டல் மெத்தாம்பேட்டமைன்' போதைப் பொருளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.16 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடத்தலில் தொடர்புடையவர்கள் யார், எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடி அருகே வேம்பார் கடற்கரையில் ரூ.30 கோடி மதிப்பிலான 'கிறிஸ்டல் மெத்தாம்பேட்டமைன்' போதைபொருளை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து, 7 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x