Published : 04 Apr 2022 07:44 AM
Last Updated : 04 Apr 2022 07:44 AM

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 நாளில் 31 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 4 நாளில் 31 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயிலில் இருந்து இறங்கிய பிஹாரைச் சேர்ந்த பயணி ஒருவரின் உடமைகளை போலீஸார் சோதனை செய்தபோது அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 4 நாட்களில் 31 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் ராகவேந்திரா நகர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மளிகைக்கடையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த கடைக்கு சில இளைஞர்கள் அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, போலீஸார் கடைக்குள் புகுந்து அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை நடைபெற்றது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக அங்கிருந்த 2 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், கடையின் உரிமையாளரான கொரட்டூரைச் சேர்ந்த மோகன்லால் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x